சட்டசபை தேர்தலில் கிரண்குமார் ரெட்டி போட்டியில்லை! சகோதரரை வேட்பாளராக்கினார்!!
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வரும் ஜெய் சமைக்யாந்திரா கட்சித் தலைவருமான கிரண்குமார் ரெட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் தமது சகோதரரை வேட்பாளராக்கியிருக்கிறார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிராக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர் கிரண்குமார் ரெட்டி. அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு முழுக்குப் போட்டுவிட்டு தனிக் கட்சியையும் தொடங்கினார்.
சீமாந்திரா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று கடைசி நாள். முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சித்தூர் மாவட்டம் பிலேரு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசிநேரத்தில் திடீரென தமது சகோதரர் கிஷோர்குமார் ரெட்டியை வேட்புமனுத் தாக்கல் செய்து வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்குமார் ரெட்டி, சீமாந்திரா முழுவதும் தாம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலேயே போட்டியிடவில்லை என்றும் கூறினார்.
மேலும் கிரண்குமார் ரெட்டி கட்சி சார்பில் முன்னாள் எம்.பி.க்கள் ஹர்ஷ குமார், சப்பாம் ஹரி ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் லோக்சபாவில் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமாந்திராவின் கிரண்குமார் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 18 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.