சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சிக்கிய அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
குவஹாத்தி: நாட்டை உலுக்கிய சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் விசாரிக்கப்பட்ட அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை மோசடி செய்து பல்லாயிரம் கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் மிகப் பெரும் அரசியல் பிரபலங்கள், காவல்துறை அதிகாரிகள் சிக்கினர்.
கடந்த மாதம் 29-ந் தேதி அதிரடியாக 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அஸ்ஸாம் மாநில டிஜிபி சங்கர் பரூவாவின் வீடும் அலுவலகமும் அடங்கும்.
இந்த நிலையில் இன்று திடீரென சங்கர் பரூவா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.