ஹைதராபாத்: மலிவு விலை உணவகத்தில் ரூ.1க்கு பிரேக் ஃபாஸ்ட்
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் மலிவுவிலை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 5ரூபாய்க்கு காலை உணவு வழங்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் 1ரூபாய்க்கு காலை உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா உணவகம்' மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை அண்டை மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கி உள்ளன.
ஹைதராபாத் மாநகராட்சி
தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் இதே போன்று உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது.
ஒரு ரூபாய்க்கு உணவு
இந்த நிலையில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக ஹைதராபாத் மேயர் முகம்மது மஜீத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
பசியை போக்கும் திட்டம்
ஹைதராபாத்தில் மலிவு விலை உணவகத்தை திறந்து வைத்த மேயர், ‘ஏழை மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் பசியை போக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
வரி வசூல் மூலம்
வரும் மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வசூலிக்கப்படும் வரியினங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுகிறது' என்று தெரிவித்தார்.