பெண்களுக்கு புத்தி சொல்லாதீர்கள், ஆண்களை திருத்துங்கள்- பெங்களூர் கல்லூரி மாணவிகள் கொதிப்பு
பெங்களூர்: பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று ஆண்களுக்கு அறுவுரை கூறுங்கள், அதைவிடுத்து பெண்கள் எங்கு செல்ல வேண்டும், எப்படி ஆடை அணிய வேண்டும் என்று சொல்லிக்கொடுக்காதீர்கள் என்று பெங்களூர் நகர கல்லூரி மாணவிகள் கூறுகிறார்கள்.
பெங்களூர் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுள்ளதால், பெங்களூர் நகரில் போராட்டம் தீவிரமாகியுள்ளது.
மாணவிகள் போராட்டம்
பள்ளி குழந்தைகளின் பெற்றோர், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகளும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் மாணவிகள் தொடர்முழக்க பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி வருகிறார்கள்.
பாதுகாப்பு தேவை
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த கல்லூரி மாணவிகள் தங்கள் கருத்துக்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். ரஷ்மி என்ற மாணவி கூறுகையில், "எங்களுக்கு வேறு எந்த பெரிய கோரிக்கையும் கிடையாது. பெங்களூர் நகரில் உல்ள பெண்கள் பாதுகாப்பாக வசிக்க வழி செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை" என்றார்.
ஆண்களுக்கு அட்வைஸ் செய்யுங்கள்
லலிதா என்ற மாணவி கூறுகையில், "எப்படி ஆடை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு சொல்லிக்கொடுப்பவர்கள்தான் இந்த சமூகத்தில் அதிகம் உள்ளனர். அதுமட்டுமின்றி பெண்களை அங்கே போகாதே, இங்கே போகாதே என்று கடிவாளம் போடுகிறார்கள். இப்படி எங்களுக்கு சொல்லித்தருவதற்கு பதிலாக, பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். ஏனெனில் ஆண்களின் தாயும், சகோதரியும் பெண்கள்தான்", என்றார் காட்டமாக.
சக உயிராக பார்ப்பதில்லை
தீபா பிரியா என்ற மாணவி பேசுகையில் "பெண்களை சக ஜீவன்களாக ஆண்கள் பாவிப்பது கிடையாது. தங்கள் ஆசையை பூர்த்தி செய்யும் உயிரினமாகவும், சில நேரங்களில் பொம்மையாகவும்தான் பார்க்கிறார்கள்" என்றார் வேதனையுடன்.
பெண்கள் மீது தவறு உள்ளது
அதே நேரம் முன்னணி உளவியல் நிபுணர்களோ, ஆடை விஷயத்தில், பெண்களின் மீதும் தவறு இருப்பதாக கூறுகிறார்கள். காமத்தை தூண்டுவதற்கு ஏதாவது காரணம் தேவை. அப்போதுதான் உயிரினம் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பெண்கள் ஆடையை குறைப்பதும் காமத்தை தூண்டும் ஒரு வழிமுறைதான். ஆபாசமாக இருக்கும் ஒரு பெண்ணை பார்த்து ஆணுக்கு காம உணர்ச்சி வருவது இயற்கையின் குணநலன்.
யோசிப்பது கிடையாது
மேலை நாடுகள் சொல்லி கொடுப்பதை, ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஆடையில் காண்பிக்கும் பெண்கள், எதற்காக நாம் ஆடையை குறைக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. வசதியாக இருக்கும் ஆடைகளை அணிவதில் தவறில்லை. ஆனால் உடலை காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளை ஏன் அவர்கள் அணிய வேண்டும். ஆண்கள் தங்கள் உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு ஆபாசமான ஆடையோடு தெருவில் நடந்தால் அதை பெண்கள் அருவறுப்பாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் பெண்கள் மட்டும் மார்புகள், தொப்புள் தெரிய ஆடை அணிந்தால் அது தவறில்லை என்று எப்படி கூறுகிறார்கள் என்றே புரியவில்லை.
மனநோயாளிகள்
சிறுமிகளிடம் தவறாக நடந்துகொள்வது ஒரு மனவியாதி. அதுபோன்ற நபர்கள் வக்கிர புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள். சிறு வயதில் பாலியல் தொடர்பான கொடுமைக்கும் அவர்கள் உள்ளாகியிருக்க கூடும். அதுபோன்ற நபர்கள் உடனடியாக மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்று தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.