என்னது ஆளுநரிடம் ஹைதராபாத் நிர்வாகமா? மத்திய அரசுக்கு டி.ஆர்.எஸ். வார்னிங்!!
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரிடம் சட்டம் ஒழுங்கை ஆளுநரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிடாவிட்டால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின்னர், ஆந்திர சட்டசபையின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.
ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சம்பிராதயத்துக்காக ஆந்திர சட்டசபைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அதிகாரப்பூர்வமாக செயல்பட துவங்கும்.
இதற்கு கால அவகாசம் தேவை என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கிடையில் தெலங்கானாவுக்கும், சீமாந்திராவுக்கும் பொது தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள ஹைதராபாத் நகரின் சட்டம்-ஒழுங்கு உள்பட அனைத்தும் ஆளுநரின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டு வரப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் வழிகாட்டுதலை ஆளுநர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். இதனை ஆளுநர் கையில் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தெலுங்கானா அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக தெலங்கானா மசோதாவில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.