இமயம் நிஜமாகவே சரியும் வறட்சியால் உலகம் அழியும்- ஐ.நா எச்சரிக்கை
டெல்லி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை உலக நாடுகள் சந்திக்க தயாராக வேண்டும்.
ஆசியா கண்டத்தை பொறுத்தவரை இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடும் வெயில் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அபாயகரமான நிலைமை ஏற்படலாம் என ஐ.நா வின் புவியியல் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
புவி வெப்பமடைதல், பாறைகள் நகர்வு உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட ஐ.நா. சபையின் கமிட்டி இது பற்றிய தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொடுமையான வெயில்:
இதன்படி, இந்த நூற்றாண்டின் மத்தியில் ஆசியா கண்டத்தை பொறுத்த வரையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் மிகக்கடுமையான வெயிலை மட்டுமல்லாது குடிநீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அத்துடன் உணவு தானியங்களுக்கும் பற்றாக்குறை ஏற்படும்.
வறட்சி நிலை:
முக்கியமாக வறட்சி ஏற்பட்டால் உருவாகும் தண்ணீர் மற்றும் உணவு தானிய பற்றாக்குறை காரணமாக மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும்.
கருகும் பயிர்கள்:
பருவநிலை மாற்றம் ஆசிய கண்டத்தில் உணவு பாதுகாப்பில் ஒட்டுமொத்தமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றபோதிலும், இந்தியா மற்றும் சீனாவில் கோதுமை பயிரிடும் வயல்களில் கடுமையான தாக்கம் ஏற்பட்டு பயிர்கள் கருகிப்போய்விடும்.
ஏழை நாடுகள்தான் பாவம்:
பருவநிலை மாற்றம் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், ஏழை நாடுகள் இயற்கை வளங்கள் பற்றாக்குறையால் மேலும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
வெள்ளப்பெருக்கு அபாயம்:
உலக வெப்பம் அதிகரிப்பதால் சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் திபெத் ஆகிய இடங்களில் பனிப்பாறைகள் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவிலும், பங்காளதேஷில் டாக்காவிலும் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.
உருகும் பனிமலைகள்:
சீனாவின் பல ஆறுகளில் நீர்மட்டம் தாறுமாறாக உயரும். பனிமலைகள் உருகுவதால் சீனாவின் 4 நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மேலும், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.