டெஹல்கா தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கு- கைது செய்ய கோவா போலீஸ் டெல்லி விரைவு!!
சக பெண் பத்திரிகையாளருக்கு தருண் தேஜ்பால் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அண்மையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் தேஜ்பால் அப்பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறி இருக்கிறார்.
இது தொடர்பாக டெஹல்கா நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரிக்கு மின் அஞ்சல் மூலம் அப்பெண் பத்திரிகையாளர் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து தமது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் இதற்காக 6 மாத காலம் தாம் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தேஜ்பால் தெரிவித்திருந்தார். ஆனால் அப்பெண் பத்திரிகையாளரோ கமிஷன் ஒன்றை அமைத்து விசாரிக்க கோரியிருந்தார்.
இதனால் டெஹல்கா நிர்வாகம், விசாரணைக் கமிஷனை அமைப்பதாக நேற்று இரவு அறிவித்தது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்..
இந்நிலையில் இன்று தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கை கோவா போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பனாஜியில் கோவா மாநில டிஜிபி கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெஹல்கா தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார்.
இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், கோவா மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது.
மேலும் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தி கைது செய்ய டெல்லிக்கு கோவா போலீசார் விரைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.