நேதாஜி, கன்ஷிராம், வாஜ்பாய், ரவிவர்மாவுக்கு பாரத ரத்னா? : அரசு பரிசீலனை
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியிடம் பாரத ரத்னா விருதுக்கு 5 பதக்கங்களை தயாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நாணய தயாரிப்பு பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயரிய விருது
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கையினால் விருது
வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா' என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.
தமிழர்களுக்கு பெருமை
நாடு சுதந்திரமடைந்த பின்பு, 1954ம் ஆண்டில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் முதன்முதலாக இந்த பாரத ரத்னா விருதை ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் பெற்றனர். இந்த மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விசயம்.
நேதாஜிக்கு பாரத ரத்னா
நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் இந்த விருதைப் பெற மறுத்தார். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.
நாடு கடந்த விருது
இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.
பெண்களுக்கு பெருமை
இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள். வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர்
கடந்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கும், சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அது பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
இதுவரை 43 பேருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் எம்.ஜி.ஆர். உள்பட 11 பேர் மறைந்த பிறகு அளிக்கப்பட்டது.
இளம் வயதில் விருது
உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாரதரத்னா விருது யாருக்கு வழங்கப்படும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
5 பதக்கங்கள் தயார்
இந்த வார தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியிடம் பாரத ரத்னா விருதுக்கு 5 பதக்கங்களை தயாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி நாணய தயாரிப்பு பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடல் பிகாரி வாஜ்பாய்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென பாஜ நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. எனவே, இந்த ஆண்டில் வாஜ்பாய்க்கு இந்த விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்ஷிராமுக்கு விருது
அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்றும் பரபரப்பான செய்திகள் வெளியாகியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
நேதஜிக்கு பாரதரத்னா
சுதந்திரத்துக்கு முன்பே இந்திய ராணுவத்தை கட்டிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஓவியர் ரவிவர்மா
பிரபல ஓவியர் ரவிவர்மா, இந்து புராணங்களை வெளியிட்ட கீதா பதிப்பகத்தை உருவாக்கிய அனுமன் பிரசாத் போடர் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. வரும் 15ம் தேதி சுதந்திர தினத்துக்கு முன்பாக பாரத ரத்னா விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.