உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி?
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்சநீதிமன்றத்தின் பார் அசோசியேசன் முன்னாள் தலைவர் கிருஷ்ணமணி மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்தியில் மோடி அரசு பதவியேற்ற பின்னர் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, மிசோரம், மேற்குவங்கம் கோவா உள்ளிட்ட மாநில ஆளுநர்கள் ராஜினாமா செய்தனர். கர்நாடகா ஆளுநராக இருந்த பரத்வாஜ், திரிபுரா ஆளுநராக இருந்த தேவானந்த் கொன்வார் ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
புதுச்சேரி ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் மகாராஷ்டிரா ஆளுநர் சங்கரநாராயணன், கேரளாவின் ஷீலா தீட்சித், ஹரியானாவின் ஜகனாத் பகாடியா, பஞ்சாபின் சிவராஜ் பாஅட்டீல் ஆகியோரையும் நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய ஆளுநர்கள் நியமனம்
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்நாயக் உத்தரப்பிரதேச ஆளுநராகவும், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக கேசரிநாத் திரிபாதி, குஜராத் ஆளுநராக கோஹ்லி, சத்தீஸ்கர் ஆளுநராக பல்ராம்ஜி தாஸ் தாண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நீதிபதி சதாசிவம்
தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவத்துக்கும் ஆளுநர் பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் கடந்த ஏப்ரல்மாதம்தான் பணி ஓய்வு பெற்றார்.
எந்த பதவியும் ஏற்க தயார்- சதாசிவம்
இது குறித்து தற்போது டெல்லியில் தங்கியிருக்கும் நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையம், லோக்பால் போன்ற எந்த ஒரு தலைவர் பதவியையும் வகிக்க தாம் தயார் என முன்பு சதாசிவம் கூறியிருந்தார்.
கிருஷ்ணமணி
மேலும் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான வழக்கில் அத்திட்டத்தை எதிர்ப்போர் சார்பில் ஆஜராகி வாதாடியவரும் உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் முன்னாள் தலைவருமான எம்.என். கிருஷ்ணமணியையும் ஆளுநராக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோலி சொராப்ஜி
அதேபோல் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியையும் ஆளுநராக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.