கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் நாளை ஓய்வு: ரோசய்யாவுக்கு கூடுதல் பொறுப்பு
டெல்லி: கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு இம்மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஹம்சராஜ் பரத்வாஜ். இதன்பிறகு, 2009ம் ஆண்டு ஜூன் 29ம்தேதி கர்நாடக மாநில ஆளுநராக பரத்வாஜ் நியமிக்கப்பட்டார். அப்போது மாநிலத்தில், ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கும், இவருக்கும் தினம் ஒரு மோதல் நடந்து கொண்டேயிருந்தது.
பரத்வாஜை திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு குடியரசு தலைவரிடம், கர்நாடக பாஜகவினர் கோரிக்கை மனு அளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது. ஆயினும் பரத்வாஜ் ஆளுநராக தொடர்ந்தார். இந்நிலையில், 77 வயதான பரத்வாஜின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறுகிறது. புதிய ஆளுநர் பெயர் அறிவிக்கப்படாத சூழ்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யா, கர்நாடகாவையும் கூடுதலாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல திரிபுரா ஆளுநர் தேவானந்த் கோன்வாரும் நாளை ஓய்வு பெறுகிறார். அம்மாநில ஆளுநர் பொறுப்பை, மிசோராம் ஆளுநர் வக்கோம் புருஷோத்தமன் கூடுதலாக கவனிப்பார். இந்த பதவி ஓய்வுகள் மூலமாக மொத்தம் ஐந்து மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாக தொடர உள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி, சட்டீஸ்கர் ஆளுநர் சேகர் தத், நாகாலாந்து ஆளுநர் அஸ்வனி குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.