வீட்டு பாத்ரூமில் குடியிருந்த முதலை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!
அகமதாபாத்: குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் வீடு ஒன்றில் 5 அடி நீள முதலை பாத்ரூமில் பதுங்கியிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. கடந்த 21-ந் தேதி ஆன்ந்த் மாவட்டத்தின் சோஜித்ரா கிராமத்தில் உள்ள பாரத் படேல் என்பவர் தமது வீட்டின் பாத்ரூம் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
பாத்ரூமின் மூலையில் 5 அடி நீள முதலை பதுங்கியிருந்தது கண்டு அலறியிருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்தவர்களிடமும் இது பற்றி கூற ஒட்டுமொத்த குடும்பமே பாத்ரூமை பூட்டிய கையோடு வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடியது.
இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து முதலையை பிடித்து அருகில் உள்ள ஏரி ஒன்றில் கொண்டுபோய்விட்டனர். இருந்தாலும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து அந்த குடும்பமும் இன்னமும் மீளவில்லையாம்.