பெண்களே! ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணியாதீர்கள்: இது குஜராத் போலீஸ்!!
காந்திநகர்: குஜராத்தில் உள்ள போர்பந்தரில் போலீசார் பெண்களை ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணியக் கூடாது என்று கூறி ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் பெண்கள் ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணிந்து வெளியே செல்லக் கூடாது என்று போலீசார் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளதாக இந்தி மொழியில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வழக்கமாக காப் பஞ்சாயத்து ஆட்கள் தான் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று அவ்வப்போது உத்தரவிடுவார்கள்.
இந்நிலையில் மாநில போலீசாரே இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்திபென் பட்டேல் என்னும் ஒரு பெண் ஆளும் குஜராத்தில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.