மனஅழுத்தம்.. பெற்றோருக்கு ஸாரி கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை!
கவுகாத்தி: கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் மாணவர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவர் துஷார் யாதவ் (19) கல்லூரி விடுதியின் அருகே இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், மாணவர் தனது பெற்றோரிடம் தன்னை மன்னிக்குமாறு எழுதியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோர் டெல்லி அருகே உள்ள குர்கானில் வசித்து வருகின்றனர்.
மாணவர் கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மாணவர் தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இரண்டு மாதங்களாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் என்னுடைய வாழ்வை முடிவுக்கு கொண்டு வருகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) போன்ற நிறுவனங்களில், பயிலும் மாணவர்கள், உளவியல் பிரச்சனைகளால் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, பண பிரச்சனை போன்றவை காரணமாக 30 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 872 பேர் உளவியல் பிரச்சனைக்கு ஆட்பட்டுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற மாணவர்களில், 12 பேர் இறந்துள்ளனர். இவர்களில், எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி., பிரிவை சேர்ந்த மாணவர்கள் மட்டும் 7 பேர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், இந்த ஆண்டில் 24 மணி நேரம் இயங்கும் நன்கு கட்டமைக்கப்பட்ட ஆலோசனை மையம், ஹெல்ப் லைன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐ.ஐ.எம்/என்.ஐ.டி/சி.எப்.டி., போன்ற நிறுவனங்களில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.