ஹரியானா முதல்வர் பேச்சை தடுத்த பாஜகவினர்... இனி மோடியுடன் மேடையேற மாட்டேன் என அறிவிப்பு!
பாட்னா: பிரதமர் மோடியின் முன்பாக முதல்வர் ஹூடாவைப் பேச விடாமல் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பியதால் ஹரியானா சாலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஹரியானா முதல்வர் புபேந்திர சிங் ஹூடா, ‘பிரதமர் பதவியின் புனிதத்தை மோடி கெடுத்து விட்டார்' என குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியானா மாநிலம் கைதாலில் சாலை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் புபேந்திர சிங் ஹூடாவும் பங்கேற்றார்.
மோடியின் வருகைக்கு முன்னதாக முதல்வர் ஹூடா தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோடி வரும் ஹெலிகாப்டரின் சத்தம் கேட்கவும் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரின் கவனமும் மோடி பக்கம் திரும்பியது. ஹூடாவின் உரையை யாரும் கவனிக்கவில்லை. இதனால் சற்று அதிருப்தி அடைந்தார் ஹூடா.
வட்டியும், முதலும்...
அதனைத் தொடர்ந்து அடிக்கல்லை நாட்டி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ‘ஹரியானா மக்களின் நகைச்சுவை உணர்வு எனக்கு நன்கு தெரியும். இது இந்த மண்ணின் தனிச்சிறப்பு. ஹரியானா மக்கள் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பிற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். இங்குள்ள மக்கள் என் மீது மிகவும் நம்பிக்கையும், அன்பையும் கொண்டுள்ளனர். அவர்களின் அன்பிற்கு வட்டியாக வளர்ச்சியை நிச்சயமாக அளிப்பேன்.
ஊழல் புற்றுநோய்...
ஊழல் புற்றுநோய் போன்று பரவியுள்ளது. புற்றுநோயை விட மோசமானது ஊழல். ஊழல் என்ற புற்றுநோயில் இருந்து தேசம் விடுபட வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை. புற்றுநோயை விட மோசமான ஊழலை அழிக்க கடும் நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும்.
சிறப்புக் கவனம்...
அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படும். குஜராத் போன்று ஹரியானா வளர்ச்சி மாநிலமாக மாற்றப்படும். புதிய தலைமுறையினருக்காக எங்களது அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களின் பிரதம சேவகனாக பொறுப்பேற்றுள்ள போதிலும், ஹரியானா மாநிலத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துவேன்' என உரையாற்றினார்.
அரசியல் மேடை...
பின்னர், இந்த நிகழ்ச்சி குறித்து கருத்துத் தெரிவித்த ஹூடா, ‘அரசு விழா மேடையை மோடி அரசியல் மேடையாக்கி விட்டார். இனி, ஒரு போதும் மோடியுடன் ஒரே விழா மேடையில் தோன்ற மாட்டேன். பிரதமர் பதவிக்குரிய புனிதத்தை மோடி கெடுத்து விட்டார்' எனக் கூறினார்.
பாஜகவினர் கோஷம்...
ஹூடாவின் கோபத்துக்கும் காரணம் இருந்தது. மத்திய அமைச்சர்கள் கிருஷன் பால் குர்ஜார், நிதின் கத்காரி ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர். அவர்கள் பேசியபோது கூட்டம் அமைதியாக இருந்தது. ஆனால் பின்னர் ஹூடா பேசியபோது பலர் எழுந்து சத்தம் போட்டனர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷமும் போட்டனர். இதனால் ஹூடா கடுப்பாகி விட்டார்.
மோடி மீது கோபம்...
மோடியும் இதைப் பார்த்து கூட்டத்தினரை அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். ஆனால் அதை கூட்டத்தினர் கேட்கவே இல்லை. இதனால் ஹூடா தான் பேச விரும்பியதை வேகமாகப் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் பேசியது எதுவுமே சரியாக கேட்கவில்லை. அத்தனை சத்தம் போட்டனர் கூட்டத்திற்கு வந்தவர்கள். இதனால்தான் மோடி மீது கோபத்தைக் காட்டினார் ஹூடா.