ஹரியானா முதல்வர் ஹூடாவை நீக்க கோரி அமைச்சர் ராஜினாமா!
சண்டிகர்: ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி அம்மாநில அமைச்சர் அஜய் யாதவ் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஹூடா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மாநில மின் துறை அமைச்சர் அஜய் யாதவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ரிவாரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏவாக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனது அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை ஹூடாவுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து அஜய் யாதவ் கூறியதாவது:
- அமைச்சர் பதவியை விட்டு விலகினாலும் காங்கிரஸ் கட்சியில் இறுதி வரை தொடர்வேன். சோனியா காந்திதான் என் தலைவர்.
- கடந்த லோக்சபா தேர்தலில் ஹரியாணாவில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்தது. ஆனால், எந்தப் பாடத்தையும் கற்கத் தவறிவிட்டது.
- லோக்சபா தேர்தலில் கட்சியின் தோல்விக்கான காரணங்களை அந்தோணி குழுவின் முன் நான் விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். விரைவில் கட்சித் தலைமையைச் சந்திக்க உள்ளேன்.
- முதல்வர் பதவியில் இருந்து ஹூடா நீக்கப்படாவிட்டால், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
அஜய் யாதவைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்களும் ஹூடாவை நீக்கக் கோரி ராஜினாமா செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஹூடாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.