மங்கள்யான் மார்ஸுக்கு போயிடுச்சு, என்னால் சிக்னலை தாண்ட முடியல: பெங்களூர்வாசிகள் தவிப்பு
பெங்களூர்: பெங்களூரில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
பெங்களூரில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை கன மழை பெய்தது. இதனால் அலுவலகத்தில் இருந்து மக்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர். மழை நின்ற பிறகு அலுவலகங்களில் இருந்து கிளம்பியவர்கள் வீடு போய் சேர்வதற்குள் படாதபாடு பட்டுவிட்டனர்.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் ஒருவழியாக வீடுகளுக்கு சென்றனர்.
காலை
இரவு தானே மழை பெய்து சாலையெல்லாம் வெள்ளக்காடானது. காலையில் அலுவலகத்திற்கு செல்வதில் பிரச்சனை இருக்காது என்று நினைத்து கிளம்பியவர்கள் நினைப்பில் இடி விழுந்தது.
டேக் டைவர்ஷன்
பெங்களூரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு வேறு பாதையில் செல்லவும் என்று வாகன ஓட்டிகளை அனுப்புகிறார்கள்.
சுற்றி சுற்றி
போக்குவரத்து போலீசார் சொல்லும் சாலைகளில் சுற்றி சுற்றி 6 தெருக்கள் தள்ளியிருக்கும் அலுவலகத்தை அடையவே 1 மணிநேரத்திற்கும் மேலாகிறது.
முதல்வன் டிராபிக்
கோரமங்கலாவில் இன்று காலை பீக் அவரில் முதல்வன் படத்தில் வருவது போன்று போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
சில்க் போர்டு
பெங்களூரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் இதில் மழை வேறு பெய்து நெரிசலை அதிகப்படுத்திவிட்டது. அதிலும் சில்க் போர்டு சிக்னலை கடந்து செல்ல யுகமாகிறது.
மங்கள்யான்
போக்குவரத்து நெரிசலை பார்த்த மக்கள் மங்கள்யான் கூட மார்ஸுக்கு சென்றுவிட்டது ஆனால் நம்மால் சிக்னலை தாண்ட முடியவில்லையே என்று தெரிவித்தனர்.