அசாம், மேகாலயாவில் கன மழை: 10 பேர் பலி- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கவுகாத்தி: அசாம் மாநிலம் தலைநகர் கவுகாத்தியில் பெய்து வரும் கனமழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
அங்குள்ள பராலு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அணில் நகர், தருண் நகர், தேசிய நெடுஞ்சாலை 37 மற்றும் ஜிஎன்பி சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்த கடும் பழையால் காம்ருப் மாவட்ட அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளை கவனமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும என்று முதல்வர் தருண் கோகாய் மாவட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக அசாம், மேகாலயா, மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் கோல்பரா, துப்ரி, லக்கிம்பூர், கம்ரப் மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்
இந்த மாவட்டங்களில் சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த கிராமங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
10 பேர் பலி
மழை-வெள்ளத்துக்கு இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். தேசிய நெடுஞ்சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அசாம், மேகாலயா மாநிலங்களின் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மழை நீடிக்கும்
இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. எனவே வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், புதிய பேரிடர் மீட்புக் குழுவினர் வடகிழக்கு மாநிலங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மீட்புப்பணி
மீட்புப் பணி 24 மணி நேரமும் துரிதமாக செயல்பட காம்ருப் மாவட்ட அதிகாரிகள், முதல் அமைச்சரின் செயலாளர், கவுகாத்தி நகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், மழை மீட்புப் பற்றி தெரிந்து கொள்ள 0361-2733052, 0361-2237042, 8811007000 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடுமையான வெள்ளம்
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் காஷ்மீரைப் போன்று வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.