மோடி விழாக்களில் காங். முதல்வர்களை திட்டமிட்டு அவமதிக்கிறது பாஜக - காங். புகார்
டெல்லி: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் மாநில முதல்வர்களுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்புவது திட்டமிட்ட சதி எனக் குற்றம் சாட்டியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி.
கடந்த சில தினங்களாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாக்களில் அம்மாநில முதல்வர்களுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் கோபமடைந்துள்ள மகாராஷ்டிரா மற்றும் அரியானா முதல்வர்கள், இனி பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அமரப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி கூறியதாவது :-
சரியானது அல்ல...
பா.ஜனதா தொண்டர்களை தூண்டிவிட்டு மாநில முதலமைச்சர்களை அவமானப்படுத்துவது சரியானது அல்ல.
திட்டமிட்ட சதி...
மோடி தனது கட்சி தொண்டர்களிடையே பேசி இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல்படுத்தப்பட்ட சதி.
துணை நிற்போம்...
இதுபோன்று அவமரியாதையை எக்காரணத்தைக் கொண்டும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். காங்கிரஸ் முதலமைச்சர்களின் முடிவுகள் சரியானதே. அவர்களின் முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம்.
எங்களுக்கு பெரிய விசயமல்ல...
இதுபோன்ற கூட்டங்களில் 500 ஆதரவாளர்களுடன் சென்று மோடியை அவமதிப்பது காங்கிரசுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அப்படி செய்தால் பிரதமர் பதவியின் கண்ணியத்தை பாதிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.