சினிமா வில்லி சட்டசபையில் வில்லத்தனம் செய்வதா?: எம்.எல்.ஏ கிண்டலால் கதறிய ரோஜா
ஹைதராபாத்: சினிமாவில் வில்லியாக நடித்தவர் சட்டசபையிலும் வில்லத்தனம் செய்கிறார் என்று நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவை ஆளும் கட்சி எம்.எல்.ஏ கிண்டலடித்தார். திரை கலைஞர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறி சட்டசபையில் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.எல்.ஏ. விஷ்வேஸ்வர ரெட்டி பேசும்போது, ஆனந்தபுரம் மாவட்டத்தில் சராசரி அளவை விட குறைந்த அளவு மழை பெய்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பேசினார். அவர் பேசும்போதே ‘மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளும் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. கோரணப்பா புச்சய்ய சவுத்ரிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சபாநாயகர் இருக்கை முற்றுகை
இதனால் வெகுண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முற்றுகையிட்டனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ. பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று வாக்குவாதம் செய்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
சட்டசபையில் வில்லி
அப்போது, பேசிய புச்சய்ய சவுத்ரி, சினிமா, டி.வி. தொடரில் ரோஜா வில்லியாக நடித்திருக்கலாம். இதுபோல இங்கும் (சட்டசபை) நடந்து கொள்கிறார் என்றார்.
கதறி அழுத ரோஜா
இதனால் கோபமடைந்த ரோஜா, திரைப்பட கலைஞர்களை தரகுறைவாக பேசியதாக கூறி சபாநாயகரிடம் முறையிட்டார். சட்டசபையில் ரோஜா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் இதனைத் தொடர்ந்து சபை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ மீது தாக்குதல்
இதற்கிடையே புச்சய்ய சவுத்ரி மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. புத்தகம் உள்பட பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது
ரோஜா குற்றச்சாட்டு
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, கூறுகையில், நடிகரான என்.டி.ராமராவ் தொடங்கிய கட்சி தெலுங்கு தேசம். தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி திரைப்பட கலைஞர்களை மதிக்கவில்லை. விரைவில் அவர் தனது தலையில் கை வைத்து வருத்தப்படும் நேரம் வரும் என்றார் ஆவேசமாக.
விசாரணை குழு
இது தொடர்பாக சபை மீண்டும் கூடியதும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.