புனே நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தை அழுதே காப்பாற்றிய 3 மாத குழந்தை ருத்ரா
புனே: புனேவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கித் தவித்த குடும்பம் 3 வயது குழந்தை ருத்ராவின் தொடர் அழகையால் இன்று உயிருடன் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏற்பட்ட நிலச்சரிவால் 40 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடுபாடிகளில் இருந்து இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 150 பேரை காணவில்லை.
இந்நிலையில் பிரமிளா என்பவரின் வீடும் இடிந்து விழுந்தது. அவரின் குடும்பத்தார் இடிபாடுகளில் சிக்கியது மீட்புக் குழுவினருக்கு தெரியவில்லை. இந்நிலையில் பிரமிளாவின் 3 மாத ஆண் குழந்தையான ருத்ரா இடிபாடுகளில் இருந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு மீட்புக்குழுவினர் ருத்ரா மற்றும் அவரது அம்மாவை பல மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
அப்போது உதவி கேட்டு மேலும் இருவர் அலறும் சத்தம் கேட்டு அவர்களும் மீட்கப்பட்டனர். அந்த இருவரும் ருத்ராவின் தாத்தா, பாட்டி ஆவர். அவர்கள் நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு இடிந்தபோது பிரமிளா ருத்ராவுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். வீடு இடிந்ததும் அவர் தனது குழந்தையை கட்டிப்பிடித்து அதை பாதுகாத்துள்ளார்.
இது குறித்து பிரமிளா கூறுகையில்,
நான் இரும்பு பீரோவை பிடித்துக் கொண்டு காப்பாற்றுமாறு கத்தியும் யாருக்கும் கேட்கவில்லை. ஆனால் என் மகன் அழுகை சத்தம் கேட்டு எங்களை கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர் என்றார்.