அருணாச்சல், திபெத்... இந்திய ராணுவ தளபதியை நெளிய வைத்த சீன ராணுவ அதிகாரிகள்
டெல்லி: சீனப் பயணத்தின்போது சீன ராணுவ அதிகாரிகள் சிலர் கேட்ட கேள்விகளால் ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங் தர்மசங்கடத்தில் மூழ்க நேரிட்டது. இருப்பினும் அவர்களின் கேள்விகளை அவர் திறம்பட சமாளித்தார்.
ராணுவத் தளபதி பிக்ரம் சிங் சமீபத்தில் பெய்ஜிங் போயிருந்தார். அப்போது சீன ராணுவத்தினர் சிலர் கேட்ட கேள்விகள்தான் அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. ஆனாலும் அதற்கு சற்றும் சளைக்காமல் பிக்ரம் சிங் பதிலளித்தார்.
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
பெய்ஜிங்கில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குப் போயிருந்தார் பிக்ரம் சிங். அங்கு அவரிடம் பார்வையாளர்களாக வந்திருந்த இளம் ராணுவ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்குப் பதிலளித்தார் பிக்ரம் சிங்.
பெண் கர்னல் கேட்ட கேள்வி
அப்போது இளம் பெண் கர்னல் ஒருவர், பிக்ரம் சிங்கிடம், அருணாச்சல் பிரதேசம் குறித்த இந்திய ராணுவத்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார். இதை பிக்ரம் சிங் எதிர்பார்க்கவில்லை.
திபெத் குறித்தும் கேள்வி
அதேபோல திபெத் குறித்தும், இந்தியாவில் திபெத்திய அகதிகள் செயல்படுவது குறித்தும் கூட சிலர் கேட்டனர்.
அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி
அருணாச்சல் பிரதேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பிரிக்க முடியாத ஒன்று என்று அவர் கூறினார்.
இந்திய மண்ணில் அன்னிய அரசியல் கூடாது
அதேபோல திபெத் குறித்த கேள்விக்கு அவர், தனது மண்ணில் வெளிநாட்டு அரசியல் செயல்பாடுகள் நடப்பதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
ஜூலை 2 முதல் 5 வரை
ஜூலை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிக்ரம் சிங் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சீன ராணுவ கமிஷன் அழைப்பின் பேரில் அவர் போயிருந்தார். இந்த கமிஷன்தான் சீன ராணுவத்தை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
7 வருடங்களுக்குப் பிறகு
கடைசியாக இந்திய ராணுவத் தளபதி ஒருவர் 2007ம் ஆண்டுதான் சீனா போயிருந்தார். அப்போது ஜே.ஜே. சிங் போயிருந்தார். அதன் பின்னர் சீனாவுக்குச் சென்ற முதல் தளபதி பிக்ரம்சிங்தான்.
எங்க பகுதி
அருணாச்சல் பிரதேசத்தை தனது பகுதியாக கூறி வருகிறது சீனா. இதுதொடர்பாக பல்வேறு குசும்புகளையும் அது தொடர்ந்து செய்தபடி உள்ளது. அருணாச்சல் பிரதேச மக்கள் சீன விசா கோரி விண்ணப்பித்தால், தனியாக ஒரு தாளை இணைத்து விசா தந்து இந்தியாவைச் சீண்டி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தலாய் லாமாவையும் பிடிக்கவில்லை
அதேபோல தலாய் லாமா இந்தியாவில் இருப்பதையும் அது விரும்பவில்லை. தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதையும் அது தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
17 ரவுண்டு பேச்சு
இரு நாட்டு எல்லைப் பிரச்சினை தொடர்பாக இதுவரை 17 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.