சச்சினுக்கு கொடுத்த பாரத ரத்னா விருது 'காசியப்பன் பாத்திரக் கடையில்' வாங்கியதாமே...!!!!
மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு திறமையின் அடிப்படையில் பாரத ரத்னா விருது கிடைக்காமல், சிபாரிசால் கிடைத்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் கட்டியம் கட்டி கூறுகின்றன.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த பிப்ரவரி 4ம்தேதி குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. பல துறைகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் உள்ளிட்டோர் அடங்கும்.
அப்போதே சந்தேகம்
இளம் வயதிலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது அப்போதே பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சச்சின் டெண்டுல்கரை மாநிலங்களவை எம்.பியாக காங்கிரஸ் நியமித்ததால், அக்கட்சி சிபாரிசின் பேரில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆர்.டி.ஐயால் அவிழ்ந்த மர்ம முடிச்சு
ஆனால் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்மத்தை மும்பையை சேர்ந்த ஒரு பத்திரிகை ஆர்.டி.ஐயின் கீழ் விண்ணப்பித்து கண்டுபிடித்துள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால், இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்த்துக்கு அளிக்கப்பட தயாராக இருந்த பாரத ரத்னா விருதை 'தட்டிப் பறித்துதான்' சச்சினுக்கு வழங்கியுள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்பு சிபாரிசு
கடந்தாண்டு நம்பர் 16ம்தேதி பாரத ரத்னா விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வெளியானது. அதில் சச்சின் பெயர் இருந்தது. ஆனால் இதற்கான பரிந்துரை இரு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
அவசர செய்தி
நவம்பர் 14ம்தேதி மதியம், 1.35 மணிக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து 'அவசரம்' என்று குறிப்பிடப்பட்டு ஒரு கடிதம் மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தில், சச்சின் டெண்டுல்கரின் பயோ-டேட்டாவை உடனடியாக பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் சிபாரிசு
இந்த உத்தரவை தொடர்ந்து நவம்பர் 14ம்தேதி மாலையில், பிரதமர் அலுவலகத்துக்கு சச்சின் டெண்டுல்கரின பயோ-டேட்டா அனுப்பப்பட்டது. உடனடியாக, பிரதமர் அலுவலகம் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்கிறது. அடுத்த நாள் அதாவது நவம்பர் 15ம்தேதி, சச்சின் மற்றும், சி.என்.ஆர்.ராவ் ஆகியோரின் பெயர்களை பாரத ரத்னாவுக்கு பரிந்துரைத்து குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இரண்டே நாளில் வாழ்த்து செய்தி
பாரத ரத்னா விருதை யாருக்கு அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய முழு அதிகாரமும், பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவரது பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க அன்றே ஒப்புதல் வழங்கிவிட்டார். நவம்பர் 16ம்தேதி விருதுகள் அறிவிக்கப்பட்டு சச்சினுக்கும், ராவுக்கும், வாழ்த்து செய்தியும் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
பின்னணியில் ராகுல்காந்தி?
தேசிய விருது ஒன்றை இரு நாட்களுக்கு முன்பு முடிவெடுத்து அறிவித்தது இதுதான் முதன்முறை. இவ்வளவு அவசரம் இதில் ஏன் காட்டப்பட்டது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி இருந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்க சந்தேகங்கள் உருவாகியுள்ளன.
ரசிகர்கள் வரவேற்பு காரணம்
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முன்பாக விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பரில் நடந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் அளித்த ஆரவாரமும், வரவேற்பும் ராகுல்மனதில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று யோசிக்க செய்திருக்க வேண்டும்.
திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி
ஏனெனில் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல்காந்தி நவம்பர் 15ம்தேதி மும்பை ஸ்டேடியத்துக்கு திடீர் விசிட் அடித்தார். மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கே ராகுல் வருவது கடைசி நிமிடத்தில்தான் தெரியுமாம். எனவேதான் ராகுல்காந்தி, விஐபிகளுக்கான இருக்கையிலன்றி, ரசிகர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தார்.
ஓட்டுக்காக விருதா?
சச்சினுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து 14ம்தேதி பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பாரத ரத்னா விருதை சச்சினுக்கு அளித்தால் காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும் என்று ஐடியா கொடுத்தது ராகுல்காந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரது சிபாரிசால் அவசர கதியில் சச்சினுக்கு அவார்ட் கொடுக்க பிரதமர் அலுவலகம் முன்வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த தகவலை சச்சினிடம் நேரில் பார்த்து கூறத்தான் அவசரமாக ஸ்டேடியத்துக்கு ராகுல்காந்தி வந்ததாகவும் தெரிகிறது.
விளையாட்டு அமைச்சகத்துக்கு மதிப்பில்லை
முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜூலை 16ம்தேதியே கையெழுத்திட்டு பிரதமர் அலுவலகத்துக்கு சிபாரிசு செய்துள்ளார். இதையேற்ற பிரதமர் அலுவலகம் ஆகஸ்ட் 6ம்தேதி, தயான் சந்த்துக்கு விருது அளிக்க முடிவு செய்துள்ளது. ஆயினும் குடியரசு தலைவருக்கு, பிரதமர் அலுவலகம் தயான் சந்த் பெயரை சிபாரிசு செய்து கடிதம் எழுதவில்லை.
தயான் சந்த் விருதை பறித்து... சச்சினுக்கு
ஆனால் சச்சின் விவகாரத்தில் மட்டும் வேகமாக முடிவெடுத்து, பிரதமர் அலுவலகம் தனது கடமையை ஆற்றியுள்ளது. மேலும் தயான் சந்த்துக்கு அளிக்கப்பட வேண்டிய விருதை பறித்து சச்சினுக்கு அளித்துள்ளது. சச்சினுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் சிபாரிசு செய்யாத நிலையிலும் அவசர கதியில் இந்த முடிவை பிரதமர் அலுவலகம் எடுத்துள்ளது. அவ்வளவு ஏன், விளையாட்டு வீரரான சச்சினுக்கு விருது கொடுக்கப்போவதே விளையாட்டு அமைச்சகத்துக்கு தாமதமாகத்தான் தெரியவந்துள்ளது. ராகுலின் செல்வாக்கு அத்தகையது என்கின்றனர் விவரம் அறிந்தோர்.
சச்சினை வைத்து காமெடி கீமெடி..
சச்சின் டெண்டுல்கர் திறமையான வீரர் மட்டுமல்ல, கோடான கோடி உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்ஷ நாயகன். அவருக்கு பாரத ரத்னா விருதை அரசியல் காரணங்களுக்காக வழங்கியிருந்தால், அது அந்த ஜாம்பவானுக்கு புகழைத்தராது. கோவில் திரைப்படத்தில் வடிவேல் கதாப்பாத்திரம் 'காசியப்பன் பாத்திரக்கடையில்' கோப்பைகளை வாங்கி வருவதற்கு ஈடாக, சச்சின் போன்ற திறமைமிகு வீரரை நிறுத்திவிட்ட அரசியலை என்னவென்று சொல்வது?