ரூ.200 கேட்ட மாணவருக்கு ரூ. 26 லட்சம் கொட்டிக் கொடுத்த ஏ.டி.எம்.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஹெச். ஏடிஎம்மில் ரூ.200 எடுக்கச் சென்ற மாணவருக்கு ரூ.26 லட்சம் கிடைத்தது. அதை அவர் பொறுப்பாக போலீசில் ஒப்படைத்தார்.
ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் லதீப். கல்லூரி மாணவர். அவர் நேற்று காலை எஸ்.ஆர். நகரில் உள்ள எஸ்.பி.ஹெச். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்றார். அவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரூ.200 கேட்டு பட்டனை அழுத்தினார். அப்போது இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியின் கதவு திறந்து அதில் இருந்து ரூ.26 லட்சம் பணம் கொட்டியது.
இதை பார்த்த லதீப் மையத்தில் இருந்த கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகளிடம் நடந்தது பற்றி தெரிவித்தார். அவர்களோ இது எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து லதீப் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பணத்தை கைப்பற்றினர். அவர்கள் மாணவர் லதீபை பாராட்டினர். சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தில் சிசிடிவி கேமராவும் இல்லை, காவலாளியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.