கூகுள் மேப்ஸை பயன்படுத்தி 56 குற்றவாளிகளை கூண்டோடு பிடித்த ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்: ஹைதராபாத் போலீசார் கூகுள் மேப்ஸை பயன்படுத்தி 56 குற்றவாளிகளை இன்று கைது செய்துள்ளனர்.
பல்வேறு குற்றங்களை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க ஹைதராபாத் போலீசார் கூகுள் மேப்ஸை பயன்படுத்தியுள்ளனர். கூகுள் மேப்ஸ் மூலம் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து 350 போலீசார் ஹைதராபாத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மங்கோட் பஸ்தி பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
மேலும் 35 குழுக்களாக பிரிந்து சென்ற போலீாசர் மாலிபள்ளி பகுதியிலும் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் தீக்குளிக்கப் போவதாக போலீசாரை மிரட்டினர். இதை பார்த்த பெண் போலீசார் மிரட்டிய பெண்களை அடக்கினர்.
இந்த அதிரடி சோதனைகளில் கொலை, கொள்ளை, பிக் பாக்கெட், இரு சக்கர வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 56 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை, பணம், இரு சக்கர வாகனங்கள், பம்ப் மோட்டார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹைதராபாத்தை குற்றமில்லா நகரமாக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று என துணை கமிஷனர் வி. சத்யநாராயணா தெரிவித்தார்.