காதல் திருமணம் செய்த பெண் என்ஜீனியர் படுகொலை: கவுரவக் கொலையா? பெற்றோர் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டூரில் 26 வயதான பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் மர்மமான முறையில் கொலையாகிக் கிடந்தார். இவர் 2 நாட்களுக்கு முன்புதான் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் தாண்டி திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் கொலையுண்டிருப்பதால் இது கெளரவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் தீப்தி. ஹைதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த 2010 முதல் அவர் பணியாற்றி வருகிறார். இவரும் இவருடன் பணியாற்றும் கிரண் குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
கிரண் குமார் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தக் காதலுக்கு தீப்தியின் பெற்றோர் ஹரிபாபு, சாம்ராஜ்யம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெற்றோர் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மார்ச் 21ம் தேதி ஆர்ய சமாஜ் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மகளைச் சமாதானப்படுத்திய அவரது பெற்றோர் திருமணத்தை ஏற்பதாகவும், சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் கூறி தீப்தியை தங்களது ஊருக்கு அழைத்துப் போயுள்ளனர். அங்கு போனதும், கிரண்குமாரையும், அவருடன் வந்த நண்பர்களையும் ஒரு லாட்ஜில் தங்குமாறு கூறி தீப்தியை மட்டும் அழைத்துப் போயுள்ளார்கள்.
பெற்றோருடன் சென்ற தீப்தியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார் கிரண்குமார். ஆனால் பதில் ஏதும் இல்லை. இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்து தீப்தி தங்கியிருந்த வீட்டுக்குப் போய் கதவை உடைத்து போய் பார்த்தபோது தீப்தி அங்கு பிணமாகிக் கிடந்துள்ளார். போலீஸ் விசாரணையில் தீப்தியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
முதலில் தீப்தியின் காதலை மறுத்த அவரது பெற்றோர் பின் அதிரடியாக சம்மதம் தெரிவித்து தீப்தியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், இது கெளவரக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீப்தியின் பெற்றோரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.