நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு நான் விஷம் தான்... மோடி பதிலடி
இடாக்: நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு நான் விஷம்தான் எனத் தெரிவித்துள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துவருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசிடம் கேட்கப்பட்ட போது, ‘நாட்டில் மோடி அலை எல்லாம் இல்லை, மோடி ஒரு விஷம்' என விமர்சித்திருந்தார்.
காங்கிரசாரின் இந்தக் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரபிரதேச மாநிலம் இடாக்கில் நடந்த பிரச்சாரத்தில் பேசியுள்ளார் நரேந்திரமோடி.
அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்த மோடி இது தொடர்பாக கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் எப்போது எல்லாம் மீடியாக்கள் பாரதீய ஜனதா கட்சியின் அலை குறித்து கேள்வி எழுப்புகிறார்களோ அப்போது, அவர்கள் மோடி ஒரு விஷம் என்று கூறுகின்றனர். அது உண்மைதான். நான் இந்த நாட்டை கொள்ளையடிக்கும் அனைவரும் விஷம்தான்' எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த முறை பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினால் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெற முடியாது என்று மோடி கூறினார்.