நேற்றுதான் வெங்காயம் சாப்பிட்டேன்... ஷீலா தீட்சித் 'அவ்வ்'.. பேச்சு!
டெல்லி: சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் முதல்வர் ஷீலா தீட்சித்தின் பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
காரணம், அவர் வெங்காய விலை உயர்வு குறித்துப் பேசியதால். தேர்தல் சமயத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் மக்களை வாட்டி வதைக்கும் விலை உயர்வு குறித்துப் பேசினால் யாருக்குத்தான் டென்ஷன் வராது.. அதுவும் ஆளும் கட்சியின் முதல்வரே பாதிப்பு குறித்து பேசினால் காங்கிரஸுக்கு டென்ஷன் வராதா என்ன...
வெங்காய விலை உயர்வால் தனது வீடும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஷீலா பேசியது காங்கிரஸாரை நெளிய வைத்துள்ளது. அதேசமயம், ஷீலா பேச்சை வைத்து காங்கிரஸை மேலும் வாரியுள்ளது பாஜக.
என் வீட்டு கிச்சனும் பாதிக்கப்பட்டிருக்கிறது
டெல்லியில் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் பேசுகையில் வெங்காய விலை உயர்வால் தனது வீட்டு சமையலும் கூட பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பல வாரங்களுக்குப் பிறகு
அவர் கூறுகையில் பல வாரங்களுக்குப் பிறகு இன்றுதான் அதாவது நேற்று நான் வெங்காயம் சேர்த்த வெண்டைக்காய் பொரியலை சாப்பிட்டேன் என்றார் ஷீலா.
விலையைக் குறைக்க நடவடிக்கை
வெங்காய விலையைக் குறைக்க எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே...
வெங்காய விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். எனது வீடும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் விலை குறையும் என்று நம்புகிறேன் என்றார்.
பொய்.. பாஜக விளாசல்
ஷீலாவின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூத்த டெல்லி பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், அப்பட்டமாக பொய் சொல்கிறார் ஷீலா.டெல்லி மக்கள் தன் அரசு மீது கடும் கோபத்துடன் இருப்பது அவருக்குத் தெரியும். வெங்காய விலையால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இது காங்கிரஸை வரும் தேர்தலில் பாதிக்கும். இதனால்தான் சென்டிமென்ட்டாக பேசி மக்களை ஆறுதல்படுத்த அவர் முயல்கிறார்.
இயலாமையை ஒப்புக் கொள்கிறார்
தனது அரசால் வெங்காய விலையைக் குறைக்க முடியாமல் போனதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறது. ஒரு பொருளின் விலை உயர்ந்தால் அதை சாப்பிடக் கூடாது என்றும் மக்களுக்கு அவர் தவறான செய்தியை தனது பேச்சின் மூலம் கொடுத்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது என்றார்.