'ஜெயா'ஜியுடன் எனக்கு நல்லுறவுதான், பரஸ்பரம் விமர்சித்தது கிடையாதே: நரேந்திர மோடி
அகமதாபாத்: தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலலிதாவுடன் தமக்கு எப்போதும் நல்லுறவு இருப்பதாகவும் தாங்கள் இருவரும் பரஸ்பரம் விமர்சித்து அறிக்கைகள் எதனையும் வெளியிட்டுக் கொண்டது இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான காங்கிரஸ் அரசுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
நான் போட்டியிடுவதால் வாரணாசியில் உள்ள முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்களா எனில் என்னைப் பொருத்தவரையில் எந்த ஒரு நபரையும் தோற்கடிக்க அங்கே செல்லவில்லை.. நான் சந்திக்கும் ஒவ்வொருவரது மனங்களையும் வெல்லவே விரும்புகிறேன்.. நான் அவர்களை நேசிக்கிறேன்..
ஜெயலலிதாவுக்கும் நானும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டதோ பேசியதோ இல்லை. என்னைப் பொருத்தவரையில் கூட்டணிகளில் எந்த ஒரு அரசியல் சக்தியும் தீண்டாதோர் என்று இல்லை.
அண்ணா திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் எப்போதும் தனிப்பட்ட முறையில் நல்லுறவுதான் இருந்து வருகிறது.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.