குஜராத் கலவரம்... குற்றம் செய்திருந்தால் என்னை தெருமுனையில் தூக்கிலிடுங்கள்: மோடி ஆவேசம்
டெல்லி: குஜராத் கலவரத்துக்காக நான் மன்னிப்பு கேட்க தேவையில்லை, என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், என்னை தெருமுனையில் தூக்கிலிடுங்கள் என தெரிவித்துள்ளார் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி.
16வது லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோடிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் மற்ற கட்சிகள் குஜராத் கலவரத்தை முன்னிறுத்தி விமர்சித்து வருகின்றன. கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் நடந்த இனக்கலவரத்தில் சுமார் 750 இசுலாமியர்கள், 254 இந்துக்கள் பலியாகினர். மேலும், சுமார் 2500 பேர் காயமடைந்தனர் 223 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏ.என்.ஐ. செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார் மோடி. அதில் அவர் குஜராத் இனக்கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு தயக்கமின்றி பதில் அளித்தார்.
அப்பேட்டியில் மோடி கூறிய கருத்துக்கள் கேள்வி-பதில் வடிவில் பின்வருமாறு...
தூக்கில் போடுங்கள்...
கேள்வி:- 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த குஜராத் இனக்கலவரங்களுக்காக மன்னிப்பு கோருவீர்களா?
பதில்:- மன்னிப்பு கேட்பதால் எந்த பலனும் ஏற்படாது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அணுக இது சரியான வழி அல்ல. என் மீதான குற்றச்சாட்டில் கடுகளவாவது உண்மை இருந்தால், என்னை தெருமுனையில் பகிரங்கமாக தூக்கில் போடுங்கள். இன்னும் 100 ஆண்டுகளுக்கு இதுபோன்ற குற்றத்தை செய்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லாத அளவுக்கு அது முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
மோடி தோற்க மாட்டான்...
நான் குற்றம் இழைத்திருந்தால், என்னை மன்னிக்கக்கூடாது. அது என்ன மன்னிக்கும் நடைமுறை? மன்னிப்பே இருக்கக்கூடாது. மோடி மன்னிக்கப்படவே கூடாது. மேலும், நான் 2002 மற்றும் 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் தோற்றிருந்தால், மன்னிப்பு கேட்கும் பிரச்சினையே எழுந்திருக்காது. ஒரு துதிபாடும் கும்பல்தான், கடினமாக உழைத்து, அலையை உருவாக்கி விட்டதாக கருதியது. ஆனால், மோடி தோற்க மாட்டான், சாகவும் மாட்டான்.
நாய்க்குட்டி...
கேள்வி:- நீங்கள் சிறுபான்மையினரை ‘நாய்க்குட்டி' யுடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை பேச்சு எழுந்ததே?
பதில்:- ஒரு எறும்பு இறந்தால் கூட மனம் வேதனை அடையும். அதற்காக, நான் பலியானவர்களை எறும்புடன் ஒப்பிடுவதாக அர்த்தம் அல்ல. இந்தியாவில்தான் வார்த்தைக்கும், வெளிப்படுத்துதலுக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது. நானே நினைக்காத கோணத்தில், எனது வார்த்தைகளை திரித்து விட்டனர்.
தாஜா செய்யும் கொள்கை...
கேள்வி:- நீங்கள் முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்ததாக கூறப்பட்டதே?
பதில்:- எனக்கு ‘தாஜா' செய்யும் கொள்கை பிடிக்காது. முஸ்லிம் குல்லாயுடன் யாராவது விளையாடினால், நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
கறுப்பு பணம்...
கேள்வி:- உங்களது பொதுக்கூட்டங்களுக்காக கறுப்பு பணம் பயன்படுத்தப்படுவதாக மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் குற்றம் சாட்டி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளாரே?
பதில்:- காங்கிரஸ் கட்சி அரசாங்கம் இன்னும் 25 நாட்கள் பதவியில் இருக்கும். இது குறித்து விசாரணை நடத்துமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். எனது கூட்டங்களில் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுவது, அந்த கட்சியின் தோல்வி பயத்தின் அறிகுறி. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவை தேர்தல் கமிஷன் கண்காணிக்கிறது. காங்கிரசிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால், அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பட்டும்.
அரசியலில் கிரிமினல்கள்...
கேள்வி:- அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் பற்றி?
பதில்:- கிரிமினல் அரசியல்வாதிகள் மீதான வழக்குளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக்கொள்வேன். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்கும் அல்ல. நிர்வாக முறையை தூய்மை ஆக்குதற்காக.
சிறைக்குச் செல்வார்கள்....
இந்த தனிக்கோர்ட்டுகளில் ஓராண்டு காலத்தில் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும். குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். (நாடாளுமன்றத்தில்- சட்டசபைகளில்) அவர்களது இடங்கள் காலியாகிற போது, அவற்றுக்கு குற்றமற்றவர்கள் வருவார்கள்.
தேச அவமானம்...
கேள்வி:- நீங்கள் ஒரு பெண்ணை பற்றி விவரம் சேகரித்த விவகாரம் குறித்து?
பதில்:- பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது தேச அவமானம். நாம் ஒரு தேசமாக இணைந்து பணியாற்ற வேண்டும். ராகுல் காந்தி இதை அரசியல் ஆக்கக்கூடாது. நானும் அதைச் செய்யக்கூடாது.
180 இடங்களை வெல்வோம்...
கேள்வி: இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் எத்தனை இடங்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும்?
பதில்: முதலில் நாங்கள் (பா.ஜனதா தனித்து) 180 இடங்களைக் கடப்போம். அரியானாவில் ரேவரியில் முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் பங்கேற்று பேசியதிலிருந்து 360-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசி முடித்து விட்டேன். இந்த தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு அதன் வரலாற்றில் கண்டிராத தோல்வியைத் தரும்' என இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.