மோடியை கடலில் கொண்டு போய் தள்ளி விடுங்க.. மீண்டும் வாயை விட்ட அய்யர்!
டெல்லி: பெண் சக்தி மட்டும் திரண்டெழுந்தால், மோடி மீண்டும் குஜராத்துக்கே ஓடி விடுவார். இன்னும் சற்று முயற்சித்து அவரை கடலில் கொண்டு போய் தள்ளி விட்டால் அந்தப் பெண் சக்தியை நான் மனதார பாராட்டுவேன் என்று மணிசங்கர அய்யர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அய்யரின் இந்தப் பேச்சுக்கு பாஜக உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. மோடியை கடலில் தள்ளுவது இருக்கட்டும், முதலில் உங்களது தேவையில்லாத டீ விற்பவர் பேச்சால் கடலில் மூ்ழ்கிப் போய் விட்ட காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற முயற்சியுங்கள் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் மகளிர் கூட்டத்தில் பேசுகையில்தான் இப்படிக் கூறினார் அய்யர்.
மோடியை விரட்டுங்கள்
அவர் பேசுகையில், பெண்களால் மக்களுக்காக உழைக்க முடியும் என்பதை நிரூபித்தது காங்கிரஸ் கட்சி. அவர்கள் மட்டும் நினைத்தால், மோடியை காந்திநகருக்கு நாளையே துரத்தி விட முடியும். அப்படியே அவரை கடலில் கொண்டு போய்த் தள்ளி விட்டால் உங்களை நான் மனதார பாராட்டுவேன் என்றார் அய்யர்.
இப்படித்தான்....
இப்படித்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, டீ விற்றவர் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படலாமா. வேணும்னா இங்க வந்து அவர் டீ விற்கட்டும், நான் ஸ்டால் போட்டுத் தருகிறேன் என்று தேவையில்லாமல் பேசி பாஜகவுக்கு செமத்தியான ஐடியாவை கற்றுக் கொடுத்து சர்ச்சைக்குள்ளானார் அய்யர். அவர் சொன்னதை அப்படியே பிடித்துக் கொண்ட பாஜக, நாடு முழுவதும் டீக்கடைக்காரர்களின் ஆதரவை அப்படியே அள்ளி விட்டது.
டீ வித்தா தப்பா..
மோடியும் கூட தனது பிரசாரத்தின்போது டீ விற்பது தவறான தொழிலா என்று கேட்டு மக்களின் அனுதாபத்தையும் தன் பக்கம் திருப்பினார். காங்கிரஸுக்குப் பெரும் சிக்கலாகி விட்டது இந்த அய்யரின் டீ பேச்சு.
பாஜக பதிலடி
மணிசங்கர அய்யரின் தற்போதைய கடல் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானாவாஸ் ஹூசேன் கருத்து தெரிவிக்கையில், மணிசங்கர் அய்யரால்தான் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே மூழ்கிப் போய்க் கிடக்கிரது. இப்போது மீண்டும் அவர் மோடியை விமர்சித்துள்ளார். முதலில் மூழ்கிப் போன காங்கிரஸை அவர் முதலில் மீட்கட்டும்.
4 மாநிலத் தேர்தல் முடியட்டும்
நான்கு மாநிலத் தேர்தல் முடியட்டும். அதன் பிறகு யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்று சவால் விடுவது போல கூறினார் ஹூசேன்.