உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா எனச் சோதித்த சிறுவர்கள் - 12 வயது சிறுவன் பலி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என விளையாட்டுத்தனமாக சிறுவன் சுட்டுப் பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்த பங்கஞ் என்ற 3ம் வகுப்பு படிக்கும் சிறுவன், சம்பவத்தன்று தனது உறவுக்கார சிறுவன் யஸ்கந்துடன் விளையாடி கொண்டிருந்துள்ளான்.
அப்போது, யஸ்கந்த் கையில் நிஜத் துப்பாக்கியொன்று கிடைத்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் துப்பாக்கி நிஜமாக வெடிக்குமா என சோதித்துப் பார்க்க விரும்பியுள்ளனர்.
சோதனை முயற்சியாக யஸ்கந்த், பங்கஞ்சின் மார்பில் சுட்டுள்ளான். இதில், குண்டு பாய்ந்து பங்கஞ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவன் யஸ்கந்த் மீது ஐபிசி 304 பிரிவின் படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், யஸ்கந்த் பயன்படுத்திய துப்பாக்கி முறையாக உரிமம் பெறாதது என்றும், அத்துப்பாக்கி யாருடையது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அப்பகுதி போலீஸ் அதிகாரி லோகேந்திர பால் சிங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இது போன்று குழந்தைகள் கையில் துப்பாக்கி கிடைப்பதும், தவறுதலாக உயிர்பலி நடப்பதும் வெளிநாடுகளில் தான் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது இத்தகைய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.