சீனா அதிபர் ஜின்பிங் வருகையின் போதும் லடாக் எல்லையில் ஊடுருவிய 1,000 சீனா வீரர்கள்!
டெல்லி: சீனா அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையிலும் காஷ்மீரின் லடாக் எல்லையில் நேற்று 1,000 சீனா வீரர்கள் ஊடுருவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக ஊடுருவி வருவதால் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் கிராமத்தில் இந்திய எல்லைக்குள் சீன நாட்டின் பொதுமக்கள் சுமார் 100 பேர் நேற்று முன் தினம் ஊடுருவினர்.
பாசன திட்டம்
கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் தொடர்ந்து சீனர்கள் ஊடுருவி, அரசு சார்பில் அந்த கிராமத்தில் கட்டப்படும் பாசன கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் இருநாட்டினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
கொடி அமர்வு கூட்டம்
இதனை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையே நேற்று முன் தினம் கொடி அமர்வு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சீனா அதிபர் வருகை
இதனிடையே 3 பயணமாக சீனா அதிபர் ஜின்பிங் நேற்று குஜராத் வருகை தந்தார். பின்னர் டெல்லி சென்றார்.
1,000 பேர் ஊடுருவல்
அந்த நேரத்திலும் சீனா ராணுவத்தினர் 1,000 பேர் மீண்டும் லடாக் எல்லையில் ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தினர்.
5 கி.மீ தொலைவுக்கு ஊடுருவல்
இந்திய எல்லைக்குள் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சீன ராணுவத்தினர் ஊடுருவினர். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 1,000 பேர் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொடி அமர்வு
இதனைத் தொடர்ந்து மீண்டும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையேயான கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்திலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.