திருப்பி அடிங்க... ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு
டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்கினால் நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீரிக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைப்பதற்காக இந்த செயலில் அது ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் தொடர்ந்து இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லை நிலவரம் குறித்து ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் டி.கே. பட்நாயக்குடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது டி.கே. பட்நாயக் சர்வதேச எல்லையில் நிலவும் சூழ்நிலை, ஜம்முவில் கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு போன்ற பிரச்சனைகளை ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுங்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.