உலகிலேயே இந்தியாவில்தான் குழந்தைகள் இறப்பு அதிகம்: ஐ.நா.
டெல்லி: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்புவிகிதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது.
அதேசமயம் 2013ஆம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 1990ல் 3.33 மில்லியனாக இருந்த குழந்தைகள் இறப்பு, 2013ம் ஆண்டு 1.34 மில்லியனாக குறைந்துள்ளது. உலக அளவில் 12.7 மில்லியனில் இருந்து 6.3 மில்லியனாக குறைந்திருக்கிறது.
மரணக்கும் குழந்தைகள்
1990-ம் ஆண்டில் பிறந்த 1000 குழந்தைகளில் 88 குழந்தைகள் மரணமடைந்தன. இந்த விகிதம் 2013ம் ஆண்டு 41 ஆக குறைந்துள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பானது பாதிக்கும் மேல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு மற்றும் சீனாவில் நடப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகமான ஏழைகள்
உலகிலேயே அதிகமான அளவு ஏழைகள் இருக்கும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 1990-ம் ஆண்டு 45 சதவீதமாக இருந்த ஏழ்மை நிலை, 2010-ம் ஆண்டு 14 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏழ்மை பரவலாகக் காணப்பட்டாலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
ஏழ்மையின் பங்கு
எனினும், உலக அளவிலான ஏழ்மையில் இந்தியாவின் பங்கு 32.9 சதவீதமாக உள்ளது. இது சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ஏழ்மை சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
14 கோடி குழந்தைகள்
2012-ஆம் ஆண்டிலும் ஐந்து வயதுக்குள்ளாகவே இறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இவற்றின் எண்ணிக்கை 14 கோடியாக உள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில்
உலக அளவில் ஐந்து வயதுக்குக்கு கீழான 66 கோடி குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் தென் கிழக்கு ஆசியாவில் மட்டும் 21 கோடி குழந்தைகள் இறக்கின்றன.
பாலியல் சமத்துவம்
இவை தவிர, 2000-ம் ஆண்டு 80 சதவீதமாக இருந்த ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் விகிதம் 2012-ம் ஆண்டு 94 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், பாலியல் சமத்துவத்தை இன்னும் அடையவில்லை
கல்வி கற்கும் பெண்கள்
ஆப்கானிஸ் தான் மற்றும் பாகிஸ்தானில் ஒவ்வொரு 10 ஆண் குழந்தைகளுக்கும் 9 பெண் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
2015 இலக்கு
சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 8 புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் இவற்றை 2015-ம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஆதரவு
உலக அளவிலான வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் வளர்ச்சி இலக்குகள் எட்டப்படாத வரை உலக அளவில் அந்த இலக்குகள் எட்டப்பட்டதாக கருத முடியாது. இந்தியாவின் ஆதரவு இல்லாமல் 2015-ம் ஆண்டுக்குப் பிறகான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் பயன்பெறாது என்று இந்தியாவுக்கான ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் லிஸே கிராண்டே கூறியுள்ளார்.