மங்கள்யான் வெற்றிகரமாக 80% தூரத்தை கடந்து விட்டது... இஸ்ரோ அறிவிப்பு
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் தனது 80 சதவீத தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகம் மற்றும் பால்வெளி மண்டலம் குறித்த ஆராய்ச்சி சர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்தாண்டு இந்தியா சார்பில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப் பட்டது தான் மங்கல்யான் விண்கலம்.
இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் தனது பாதையில் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும், 80 சதவீத தூரத்தை கடந்து விட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
மங்கள்யான்...
கடந்தாண்டு செப்.5-ஆம் தேதி இந்தியாவின் சொந்த தயாரிப்பான மங்கள்யான் விண்கலம் ஐந்து ஆராய்ச்சிக் கருவிகளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
540 மில்லியன் கி.மீ....
பூமியை சுற்றி வந்த பிறகு, செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்த மங்கள்யான் விண்கலம், சூரிய வட்டப் பாதையில் இதுவரை 540 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து பயணித்து வருகிறது.
இலக்கு...
தற்போது செவ்வாய் கிரகத்தின் மிக அருகில் உள்ள மங்கள்யான், முன்கூட்டியே திட்டமிட்டபடி, இன்னும் 2 மாதங்களில் மங்கள்யான் தனது இலக்கை சென்றடையும் என இஸ்ரோ உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தகவல் பரிமாற்றம்...
மங்கள்யான் விண்கலத்திற்கும், பெங்களூருவில் இருக்கும் தொலை தொடர்பு மையத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது.
செப்டம்பர் மாதம்...
வரும் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வெளிமண்டலத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.