மருத்துவ கல்விக்கு 17 ஆண்டுகளுக்கு பின்பு புதிய பாடத்திட்டம்!
டெல்லி: மருத்துவக் கல்விக்கான பாடத்திட்டங்களில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
மருத்துவ இளங்கலை பாடத் திட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட 17 பிரிவுகளில் இந்த புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷன் 2015 திட்டம்:
"விஷன் 2015" என்ற தலைப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு உத்தேச புதிய பாடத் திட்டங்கள் சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அப்போது செயற்குழுவில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் இது நிறைவேற்றப்படவில்லை.
அமைச்சரவை ஒப்புதல்:
இந்த அமைப்பு முறையில் சில மாற்றங்களை மருத்துவ ஒழுங்குமுறை கொண்டு வந்துள்ள நிலையில் புதிய பாடத் திட்டங்கள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி தெரிவித்தார்.
முதலாம் ஆண்டிலேயே பரிசோதனை:
இப்போது அளிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் இளங்கலை மாணவர்கள் தங்களது முதலாம் ஆண்டு கல்வி நிலையிலேயே நோயாளிகளைப் பரிசோதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கதிரியக்க சிகிச்சை பயிற்சி:
இந்த வாய்ப்பு தற்போது இரண்டாம் ஆண்டின் இறுதியில்தான் அவர்களுக்குக் அளிக்கப்பட்டு வருகின்றது. அதுபோல் கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற பிரிவுகளின் பாடத் திட்டங்களும் முதலாம் ஆண்டிலேயே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும்:
எல்லா மாணவர்களும் முதுநிலை கல்வி பெறமுடியாத நிலையில் இந்த புதிய பாடத் திட்டங்கள் மருத்துவப் பயிற்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கும் என்று டாக்டர் செல்வகுமார் என்ற எம்சிஐ உறுப்பினர் தெரிவித்தார்.
17 பிரிவுகளில் புதிய பாடத்திட்டம்:
17 பிரிவுகளுக்கான புதிய பாடத்திட்டங்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொது மருத்துவ படிப்பு மற்றும் உடற்கூறியல் போன்ற பிரிவுகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து புதிய முறையில் மாணவர்கள் அதிக பயன் பெறமுடியும் என்று மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.