டெல்லி ஏர்போர்ட்டில் தரையிறங்கும்போது தீ பிடித்த இன்டிகோ விமானம்: பயணிகள் காயம்
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இன்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 முதல் 9 பயணிகள் வரை காயம் அடைந்தனர்.
இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 147 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் இன்று மும்பையில் இருந்து டெல்லி கிளம்பியது. விமானம் இன்று மதியம் 3.35 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது முன் பக்கம் உள்ள டயர் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானத்தில் இருந்த பயணிகள் 75 வினாடிகளில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது 8 முதல் 9 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு பயணிகள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.