காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா கொடிகளுடன் நடந்த போராட்டத்தால் பரபரப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காஸா மீதான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இஸ்ரேலைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளின் கொடிகளுடன் இளைஞர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் தனிநாடு கோரும் இயக்கங்கள், பாகிஸ்தானுடன் இணைய கோரும் இயக்கங்கள் என பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி தீவிரவாதிகளை ஊடுருவ செய்து வருகிறது.
இதனிடையே கடந்த மாதம் அல்கொய்தா அமைப்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில், ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கான ஜிஹாத்தை இளைஞர்கள் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. இதேபோல் ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் காஷ்மீர் விடுதலைக்கான ஜிஹாத்தை ஆதரிக்கிறது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் 3 வார காலத்துக்கும் மேலாக கொடூர தாக்குதல்களை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை பலி கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் வெறியாட்டத்துக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காஷ்மீரில் நடந்தது என்ன?
- ஜம்மு காஷ்மீரிலும் நேற்று முன்தினம் ரமலான் பெருநாள் தொழுகை முடிந்த பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- அப்போது சில இளைஞர்கள் முகங்களை மூடிக் கொண்டு ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடியை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.
- அதேபோல் அல் கொய்தா இயக்கத்தின் கொடியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- மேலும் "ஐ.எஸ்.ஜே.கே" என்ற பதாகையையும் ஏந்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.