குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்த ஆய்வு: இஸ்ரோ ராதாகிருஷ்ணன்
ஸ்ரீ ஹரிகோட்டா: குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு நடக்கிறது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த விழாவில் சத்தீஷ்கர் மாநில கவர்னர் சேகர் தத் கலந்து கொண்டு விஞ்ஞானிகளை வாழ்த்தினார். பின்னர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் செய்தியளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ரூ.ஆயிரம் கோடி மதிப்பில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ். எல்.வி. சி24 ராக்கெட் திட்டமிட்டபடி, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி மற்றும் 1டி ஆகிய இந்த செயற்கைகோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. அதே போல் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் வரும் ஜூன் மாதம் சோதனை அடிப்படையில் விண்ணில் அனுப்பப்பட உள்ளது.
இந்த ராக்கெட் முற்றிலுமாக உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே அனுப்பப்பட இருக்கிறது. இதே போன்று பி.எஸ்.எல்.வி. சி23 என்ற ராக்கெட் 4 வெளிநாட்டு செயற்கைகோளுடன் அனுப்புவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் ராக்கெட் அதன் பயணத்தை சீராக அமைத்துள்ளது.
ஒரு நாளைக்கு 7 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்கிறது. இதனுடைய பணிகள் நல்ல படியாக கிடைத்து வருகிறது. இதே போன்று 2-வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரன்பட்டினத்தில் அமைப்பது குறித்து போதிய சாத்தியகூறுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பின்னரே ஏவுதளம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ராக்கெட்டுகளுக்கு தேவையான உதிரிபாகங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே கொள்முதல் செய்து வருகிறோம். அவற்றை உள்நாட்டிலும் கொள்முதல் செய்வது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இதுவரை 26 அனுப்பப்பட்டு இருக்கின்றது. முதல் ராக்கெட் தோல்வியை தழுவியது. தொடர்ந்து 25 ராக்கெட்டுகளும் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கிடைத்த பெரிய மைல் கல் வெற்றி என்றே கூறலாம்.
மேலும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் விண்வெளி துறைக்கு 39 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 650 கோடி செலவிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் 16 ராக்கெட்டுகள் ஏவ திட்டமிட்டுள்ளோம். சி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட் விண்ணில் அனுப்புவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.