நம். 2 ராஜ்நாத்சிங்தான்! நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்து ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்குத்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடம் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பிரதமர் மோடி ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்தியில் மே 26-ந் தேதி பிரதமர் மோடி பொறுப்பேற்றார். அவருக்கு அடுத்ததாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பொறுப்பேறார். இதனால் மத்திய அரசில் மோடிக்கு அடுத்த இடம் ராஜ்நாத்சிங்குக்குத்தான் என்று கூறப்பட்டது.
ஆனால் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி வசம் நிதி, பாதுகாப்பு, கம்பெனிகள் விவகாரம் என முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டதால் அவர்தான் மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் பிரதமர் மோடி பிரேசில் பயணம் மேற்கொண்ட போது ராஜ்நாத்சிங் வசமே ஆட்சி நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பிரதமர் மோடிக்கும் ராஜ்நாத்சிங்குக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுவிட்டது..இதனால் இம்முறை ஜப்பான் பயணத்தின் போது அருண்ஜேட்லி வசம்தான் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் இன்று காலை ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகத்தை ராஜ்நாத்சிங் வசமே ஒப்படைத்துள்ளார். இதனால் மோடி அரசில் நம்பர் 2 இடம் ராஜ்நாத்சிங்குக்குத்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.