காஷ்மீர் வெள்ளத்தில் 'ஆதாய மீன்' பிடிக்க முயலுமா பாகிஸ்தான்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடந்த 2 வாரமாக வெள்ள நீரில் மிதக்கின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும் சில அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. காரணம், எல்லைப் புறங்களில் உள்ள பல ராணுவ முகாம்கள் வெள்ளத்தில் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. இதனால் இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் ராணுவ முகாம்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிப் போய் விட்டன. இதன் காரணமாக சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் அத்துமீறக் கூடிய அபாயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூடுதல் விழிப்புணர்வோடு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ள நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
அமைதி காக்கும் பாகிஸ்தான்
அதேசமயம், கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து போர் நிறுத்த மீறல் எதுவும் நடைபெறவில்லை. எல்லைப் பகுதி சற்று அமைதியாக இருக்கிறது.
அபாயம் நீங்கவில்லை
ஆனால் தற்போது ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்பால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது. குறிப்பாக சம்பா, அக்னூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் எல்லைப் பகுதிகளில் ராணுவமுகாம்கள் நீரில் மிதக்கின்றன.
ராணுவ வீரர்கள் மீட்பு
சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரை அங்கிருந்து ராணுவம் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் தற்போது வீரர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளே நுழைய வாய்ப்பு
இப்படி ஆளில்லாமல் இருக்கும் பகுதிகள் வழியாக பாகிஸ்தான் அத்துமீறல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வாய்ப்பில்லை.. மாஜி ராணுவ அதிகாரி நம்பிக்கை
இதுகுறித்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆர்.டி.பாலியிடம் ஒன்இந்தியா கேட்டபோது, தீவிரவாதிகள் எல்லை தாண்டி வருவதில் பயிற்சி பெற்றவர்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட பெரு வெள்ள சமயத்தில் அவர்களால் எல்லையைத் தாண்டி வருவது கடினம். அதற்கான வாய்ப்பில்லை. மேலும் பாகிஸ்தானிலும் கூட வெள்ளம் கடுமையாக உள்ளது. எனவே இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றார்.
வெள்ளத்தில் மிதந்தாலும் விழிப்புணர்வில் குறைவில்லை
அதேசமயம் கடுமையான வெள்ள சூழ்நிலை இருந்தாலும் கூட எல்லைப் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் தொடர்ந்து விழிப்புணர்வோடு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.