நிர்வாணப்படத்தை பேஸ்புக்கில் போட்டதாக காதலி புகார்... விசாரணைக்கு பயந்த காதலன் தற்கொலை
ஜெய்ப்பூர்: தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தன்னுடைய காதலர் பேஸ்புக்கில் அப்லோடு செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாலிபர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவரான விக்ரம் சிங், இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விக்ரமின் காதலி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய ஆடைகளற்ற புகைப்படத்தை விக்ரம் தனது பேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து விக்ரம் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், இது தொடர்பாக அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்ததாக தன்னிடம் தான் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என அஞ்சிய விக்ரம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தன்னால் தனது பெற்றோரும் உறவினர்களும் போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களே என விக்ரம் மனவேதனையில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.