சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவு- ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்பு
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இறுதி வாதத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் குன்கா, நான்கு முறை கண்டனம் தெரிவித்ததை அடுத்து கடந்த ஜூன் 19ஆம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இறுதி வாதத்தை தொடங்கினார்.
கடந்த 24 நாட்களாக இறுதிவாதம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (22ஆம் தேதி) நடைபெற்ற வாதத்தின்போது, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, இந்த வாதத்தை என்றைக்கு முடிக்க இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு குமார், எனது வாதத்தை புதன்கிழமை இறுதி செய்கிறேன் என தெரிவித்தார். அதன்படி இன்று மதியம் தனது வாதத்தை நிறைவு செய்துள்ளார் குமார்.
ஆதரங்களை அடுக்கிய குமார்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பிலான நியாயங்களையும், சொத்துக்கள் வாங்கப்பட்ட விதம், வருமானம் போன்றவைகளை ஆதரங்களுடன் நீதிபதி முன்பு சமர்ப்பித்துள்ளார்.
25 நாட்களில் 85 மணிநேரம்
ஜெயலலிதா மீது 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில், அக்குற்றச்சாட்டை மறுத்து குமார் 25 நாட்களில் 80 மணி நேரம் வாதாடி இருக்கிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அவர் தனது வாதத்தில், "விசாரணை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றள்ளது. புலன் விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படாமல், அன்றைய ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
நால்வரையும் விடுவிக்க
இந்த வழக்கில் இருந்து எனது மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
நெருங்கும் கிளைமேக்ஸ்
ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்ததை ஒட்டி நாளை முதல் சசிகலா தரப்பு இறுதி வாதம் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இளவரசி, சுதாகரன் தரப்பின் இறுதி வாதம் நடைபெறவுள்ளது. குற்றம் சாட்டப்பட்டோரின் இறுதி வாதத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வருகிறது.