மனுவை இன்றே விசாரிக்க கோரிய மனுவை திடீரென வாபஸ் பெற்றது ஜெ. தரப்பு
பெங்களூர்: ஜாமீன் மனுவை வேறு நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் பதிவாளரிடம் அளித்த மனுவை ஜெயலலிதா தரப்பு வக்கீல் திரும்ப பெற்றுக்கொண்டார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா முன்பு
இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரைப் பார்த்த நீதிபதி, நீங்கள்தான் அரசு சார்பில்
ஆஜராகப்போகிறீர்களா என்று கேட்டார். இதற்கு பவானிசிங்கும் ஆம் என்று கூறிவிட்டு, அதற்கான உத்தரவை நீதிபதியிடம் அளித்தார்.
ஜாமீன் வழங்குவது குறித்து நீங்கள் ஏதும் ஆட்சேபனை செய்ய விரும்புகிறீர்களா என்று நீதிபதி, பவானிசிங்கிடம் கேட்டதற்கு, அவரும் ஆமாம் என்றுதெரிவித்தார்.
ஆனால் நீதிபதி ரத்தினகலாவோ, இந்த வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இதையடுத்து அடுத்த வாரம் வரையில் ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் தேசாயிடம், அதிமுக வக்கீல் ஒரு மனு அளித்தார். அதில், ஜாமீன் வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும். நீதிபதி ரத்தினகலா விசாரிக்க தயாரில்லாத நிலையில், வேறு ஒரு நீதிபதியை நியமித்து இன்றே வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்கப்பட்டது.
இந்த மனுவை ஏற்பதா, வேண்டாமா என்பதை கோர்ட் பதிவாளர் முடிவு செய்வதாக கூறினார். இந்நிலையில், மனுவை வாபஸ் வாங்குமாறு ராம் ஜெத்மலானி அறிவுறுத்தியதையடுத்து மனுவை வழக்கறிஞர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். வீணாக ஹைகோர்ட் தலைமை நீதிபதியின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று ராம் ஜெத்மலானி நினைத்திருக்கலாம் என்று அதிமுக தரப்பு கூறுகிறது.
மனு தாக்கல் செய்த அடுத்த ஐந்து நிமிடங்களில் மனுவை வாபஸ் பெற்றுள்ளது, ஜெயலலிதா தரப்பு. இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக வக்கீல் தரப்பு ஆலோசித்து வருகிறது.