சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா புதிய மனு: வேறு நீதிபதிக்கு மாற்றம்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டுச்சதி என்ற குற்றச்சாட்டை நீக்க கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்து, வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்துள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதில் சொத்துக் குவிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள கூட்டுச் சதி, ஊன்றுகோல் உள்ளிட்ட பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அதன் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி பணிந்திரா, முன்னதாக வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்ட போது கர்நாடக மாநில சட்டத்துறை செயலாளராக தான் இருந்ததாகவும், வழக்கின் பல கோப்புக்களை தான் கையாண்டு இருப்பதால் வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் மனு மீதான விசாரனையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.