தீர்ப்பு கிழமையை மாத்த சொன்ன ஜெ. வக்கீல்!… நோ சொன்ன குன்ஹா!!
பெங்களூர்: முதல்முறை முதல்வராக பதவியேற்ற போது விதைத்த வினையை மூன்றாவது முறையாக பதவிவகிக்கும் போது அறுவடை செய்யப்போகிறார் ஜெயலலிதா.
1996ல் போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. செப்டம்பர் 20 என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு தேதி, நீதிமன்றம் இடம்மாறியதால் 27க்கு மாறியிருக்கிறது. ஆனால் தீர்ப்பு வெளியாகும் கிழமை என்னவோ சனிக்கிழமைதான். இங்குதான் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் உதறல் எடுத்துள்ளது.
ஜெயலலிதா தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பதால் பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் அங்கே இருக்கும் மற்ற 95 நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படும். சிட்டியின் மையப்பகுதியில் இருப்பதால் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படுவதோடு சட்ட ஒழுங்கும் பாதிக்கும். சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் கடந்த முறை வந்தபோது யாருக்கும் இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்க முடிந்தது. அதனால் இந்த முறையும் அதே இடத்துக்கு மாற்ற வேண்டும்' இது மாநகர காவல்துறை கமிஷனர், நீதிபதி குன்ஹாவுக்கு கடிதம் எழுதியது.
'பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றக் கேட்டு ஜெயலலிதா தரப்பினரும் மனு போட்டிருந்தனர். மாநகரக் காவல் துறை கமிஷனரும் நீதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் கொடுக்கவே, 20-ம் தேதியாக இருந்த தீர்ப்பு தேதியை 27-ஆம் தேதிக்கு மாற்றி வைத்த நீதிபதி பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள காந்தி பவன் கட்டடத்தில் தீர்ப்பு வழங்கப்படும்' என்றார்.
சனிக்கிழமையை மாற்ற முடியுமா?
தீர்ப்பு தேதி ஒருவாரம் தள்ளி போடப்பட்டாலும் சனிக்கிழமை என்பதை ஏற்றுக்கொள்ளாத ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், 'தீர்ப்பு நாள் சனிக்கிழமையாக இருக்கிறது. அந்தக் கிழமையைத் தவிர வேறு கிழமைக்கு மாற்ற வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
நிராகரித்த நீதிபதி
ஆனால் வழக்கறிஞர் குமாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நீதிமன்றத்துக்கு வரும் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
சனி சரியாக வருமா?
நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கான நாளை 20-ஆம் தேதி என்று குறித்தபோதும் சனிக்கிழமைதான். 27-ஆம் தேதி என்று நாள் குறித்துள்ளார், அன்றும் சனிக்கிழமைதான். பொதுவாக நீதிமன்ற விடுமுறை தினத்தன்று தீர்ப்பு வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருக்காது, மற்ற நீதிமன்றங்கள் விடுமுறையில் இருக்கும்போது அந்த வளாகத்தில் கூட்டம் குறைவாக இருக்கும்; சட்டம் ஒழுங்கை போலீஸார் கவனிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் சனிக்கிழமையை நீதிபதி தேர்தெடுத்திருக்கிறாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகிறது.
9 ராசியான நம்பர்தான்
அதே சமயம் தீர்ப்பு தேதி என்று 27-ஆம் நாள் குறிக்கப்பட்டது ஜெயலலிதா தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனராம். 27 ன் கூட்டுத்தொகை 9. மேலும், 27-ம் தேதி ஸ்வாதி நட்சத்திரம் வருகிறது. இது ஜெயலலிதாவிற்கு ராசியான நட்சத்திரமாம், அதேசமயம் சசிகலாவுக்கு சாதாரணமான யோகம்தான் என்றும் ஜோதிட ஆலோசகர்கள் சொல்லியிருக்கின்றனராம். எது எப்படியோ 27ஆம் தேதி பரப்பன அக்ரஹாராவில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் தலையெழுத்தை எழுதப்போகிறார் நீதிபதி குன்ஹா என்கின்றனர்.
1997ல் அமைக்கப்பட்ட சிறைச்சாலை
பெங்களூர் நகரின் மிகப் பழைமையான சிறைச்சாலையான மத்திய சிறைச்சாலையில் போதிய வசதி இல்லாததாலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாலும், 1997-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக ஜே.ஹெச்.பட்டேல் இருந்த காலகட்டத்தில் பெங்களூர் புறநகர் பகுதியில் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகம் அமைக்கப்பட்டது.
தேவகவுடா திறப்பு
அப்போது பெங்களூருவின் புறநகர் பகுதியாக விளங்கிய நாகநாதபுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் உருவானது. பழைய சிறைச்சாலை இருந்த இடம் ஃபிரீடம் பார்க்-காக மாற்றப்பட்டுள்ளது. இந்த பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தை முன்னாள் பிரதமர் தேவேகவுடா திறந்து வைத்தார். இது எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வளாகத்துக்குள் மருத்துவமனை, காவல் நிலையம் அதன் அருகே 2004-ல் கட்டப்பட்ட காந்தி பவன் என்ற சிறிய கட்டடம் ஆகியவை இருக்கின்றன.
முத்திரைத்தாள் மோசடி வழக்கு
சிறைச்சாலையின் முக்கிய கைதிகளை விசாரிக்க பெங்களூரு சிட்டி நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதில் பாதுகாப்பு இடையூறுகள் ஏற்படுவதால் காந்தி பவன் ஹாலில் தற்காலிகமாக நீதிமன்றம் அமைத்து முக்கியக் கைதிகளை விசாரிக்கும் நீதிமன்றமாகத் திகழ்ந்தது. ரூ.30 ஆயிரம் கோடி முத்திரைத்தாள் மோசடி செய்த அப்துல் கரீம் தெல்கி இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இந்த நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட்டார்.
2011ல் வந்த ஜெயலலிதா
அதன் பிறகு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 313 விதிப்படி தன்னிலை விளக்கம் கொடுக்க 2011-ம் ஆண்டு அக்டோபர் 20, 21, நவம்பர் 21, 22 தேதிகள் என நான்கு நாட்கள் பரப்பன அக்ரஹாரம் வந்தார். அப்போது இந்த ஹாலில் ஒரு சிறப்பு நீதிமன்றத்துக்கான அனைத்து அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த நீதிமன்றம் மூடியே வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு
இப்போது இந்த நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் சிறப்பையும் பரப்பன அக்ஹராக நீதிமன்றம் பெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதா தரப்பினருக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா?. அவர் முதல்வராக நீடிப்பாரா இல்லை முன்னாள் முதல்வராவாரா? போன்ற பல கேள்விக்கு 27ஆம் தேதி விடை தெரியும்.