கர்நாடகம்: வேட்பாளர் திடீர் சாவு- மறுத்தேர்தல் வருமா?
பெங்களூர்: கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கர்நாடகாவிலுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 17ம்தேதி நடந்தது.
பெங்களூர் அடுத்த தும்கூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் கிருஶ்ணப்பா போட்டியிட்டார். இவர் அக்கட்சியின் மாநில தலைவராகவும் இருக்கிறார். இத்தொகுதியில் கிருஷ்ணப்பா வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் மே 16ம்தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை மாரடைப்பு காரணமாக கிருஷ்ணப்பா திடீரென உயிரிழந்தார்.
இதனால் தும்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மறுதேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார்ஷாவிடம் கேட்டதற்கு, தும்கூர் தொகுதியில் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றால் கண்டிப்பாக மறுதேர்தல் நடத்தப்படும். அவ்வாறு அவர் வெற்றி பெறாவிட்டால் மறுதேர்தல் நடத்த அவசியம் இல்லை என்றார்.
எனவே இந்த தேர்தல் முடிவுகள்தான் மறுதேர்தலை தீர்மானிக்கப்போகிறது.