ரூ.25,000 வரதட்சணை பாக்கிக்காக கணவருக்கு கிட்னி தந்த மனைவி தற்கொலை... மாமியார் கைது
ராஞ்சி: ஜார்கண்டில் வரதசட்சணை பாக்கிக்குப் பதிலாக கணவனுக்கு கிட்னி தானம் செய்தபோதும், கொடுமை தொடர்ந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த சுதாமா கிரி என்பவரது மனைவி பூனம் தேவி( 28). கடந்த 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூனம் தேவியின் தந்தை வரதட்சணையாக ரூ 1.31 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த வரதட்சணை தொகை போதவில்லை என பூனம் தேவியை கணவர் குடும்பத்தார் கொடுமை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே கிரிக்கு கிட்னி செயலிழந்தது. பூனம் தேவியின் கிட்னி கிரிக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொண்ட அவரது குடும்பத்தார், மீதமுள்ள வரதட்சணைப் பணம் ரூ25 ஆயிரத்திற்குப் பதிலாக அவரது கிட்னியைத் தானம் தரும்படி எழுதி வாங்கிக் கொண்டனர்.
கிட்னியை தானமாகக் கொடுத்த பூனம் தேவியும், இனியும் தன் தந்தையை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்த வேண்டாம் என சத்தியம் வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இருந்தாலும் கிரியின் குடுமபத்தினர் தொடரந்து தேவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர்.
இதனால் மனமுடைந்த தேவி கடந்த 16 ந்தேதி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல் கருகிய நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேவி, சிகிச்சைப் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தேவியின் தந்தை தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவியின் மாமியாரை கைது செய்துள்ளனர்.