இருநாட்டு உறவுகள் தொடர்பாக... சுஷ்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜான் கெர்ரி
டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இருநாட்டு உறவுகள் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டது.
இதற்காக ஜான் கெர்ரி, உயர்மட்டக் குழு ஒன்றுடன் நேற்று இந்தியா வந்தார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இன்று காலை டெல்லி ஐ.ஐ.டி.க்கு சென்றார் ஜான் கெர்ரி. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார் ஜான் கெர்ரி. மற்ற அமைச்சகங்களின் பிரதிநிதிகள் சந்திப்பிற்கு முன்னதாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஒரு மணி நேரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை ஜான் கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமவின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் மாத இறுதியில் மோடி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.