ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டில் மோடியைச் சந்தித்தார் ஜான் கெர்ரி...
டெல்லி: இருநாட்டு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, உயர்மட்டக் குழு ஒன்றுடன் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.
நேற்று காலை டெல்லி ஐ.ஐ.டி.க்கு சென்ற ஜான் கெர்ரி, அதனைத் தொடர்ந்து மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார். பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இன்று ஜான் கெர்ரி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். காலை 11 மணி வாக்கில் டெல்லி ரேஸ்கோர்ஸ்சில் உள்ள மோடியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது அவர் மோடியிடம் அமெரிக்க பயணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமவின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் மாத இறுதியில் மோடி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.